எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!! -    அகம் 1

                         எவனோ என் அகம் தொட்டு விட்டான்...!!!

                                                       அத்தியாயம் 1

                                   

                       ஆதவன் தன் செங்கிரணங்களால் பூமிக் காதலியை முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.நிலவும் நட்சத்திரங்களும் கதிரவன் வருகை அறிந்து,நாணி மேகத்துக்குள் முகம் புதைத்துக் கொண்டனர்.வானெங்கும் இரைகளைத் தேடும் பறவைகளின் "கீச் கீச்"ஒலி.அழகிய இளங்காலைப்  பொழுது அழகாகப் புலர்ந்து கொண்டிருந்தது.


                         இக்காட்சியைக் காண்பதற்கு நித்திலாவிற்கு ஒரு போதும் சலிப்பதில்லை. நித்திலா, இவள்தான் நம் கதையின் நாயகி.பெயருக்கேற்ற குணத்தையும் , பிறை நெற்றியையும்,வில் போன்ற புருவங்களையும்,மை விழிக் கண்களையும் ,இடையைத் தொடும் நீண்ட கருங்குழலையும் கொண்டவள்.22 வயது நிரம்பிய எம்.காம் படிக்கும் மாணவி...!


                      "ஏய் நித்தி...!வந்து பால் குடி....!கல்லூரிக்கு நேரம் ஆகிறது பார்...!"என்ற குரல் கேட்டுத் திரும்பிப் பார்த்தாள்.அவளது அம்மா மீனாட்சிதான் அழைத்துக் கொண்டிருந்தார்.


                     "உங்க மகளுக்கு அதிக செல்லம் கொடுத்துக் கெடுத்து வைச்சிருக்கீங்க...கூப்பிடுவது கூட காதில் விழாமல் நிற்கிறா பாருங்க...!" என்று கணவன் கிருஷ்ணனிடம் புகார் வாசித்தார்.


                    "விடுடி...!தினமும் நடப்பதுதானே!அவ காலைல எழுந்த உடனே மாடிக்குப் போய் ரசிக்கறதும் ... நீ அவளை திட்டறதும்... தினமும் நடக்கறதுதானே...!ஏதோ சின்னப் பெண் நம்ம வீட்ல இருக்கற வரைக்கும்தானே இப்படி இருக்க முடியும்...நாளைக்கே கல்யாணம் பண்ணிக்கிட்டுப் போனா அவங்க வீட்டுப் பொண்ணா மாறிடப் போறா.....இங்க இருக்கற வரைக்கும் அவளை அவ போக்கில் விடு...!" என்று அன்பான அப்பாவாக தன் மகளுக்குப் பரிந்து கொண்டு வந்தார்.


                   அப்போதுதான் மாடியில் இருந்து இறங்கி வந்த நித்திலா, தந்தையின் பேச்சைக் கேட்டு ,"என் செல்ல  அப்பா...!"என்றபடி அவரைக் கட்டிக் கொண்டாள்.


                  "இப்படியே ரெண்டு பேரும் கொஞ்சிக்கிட்டு  இருங்க...!நாளைக்குப் போற வீட்ல இப்படி நின்னு பராக்கு பாத்துகிட்டு இருந்தால்...நாலு சாத்து..சாத்துவாங்க.....",என்றார் மீனாட்சி.


                  "அதெல்லாம் என் பொண்ணு பார்த்துக்குவா...! நீ போய் சமையலைக் கவனி...போ...போ...!",என்று மனைவியை விரட்டியவர், தன் மகளை பாசத்தோடு அனைத்துக் கொண்டார்.


                  "அப்படிச் சொல்லுங்க அப்பா...!",என்று தன் தந்தையிடம் செல்லம் கொஞ்சிக் கொண்டிருந்த நித்திலாவை நோக்கி," சித்தி...நானு....!"என்றபடி ஓடி வந்தது அவர்கள் வீட்டுக் குட்டி வாண்டான,அதிதி.


                  "என் செல்லக் குட்டி !வாடா....!",என்றபடி அந்தக் குட்டியை அள்ளிக் கொண்டாள்,நித்திலா.


                   கிருஷ்ணன்-மீனாட்சி தம்பதியின் மூத்த மகள் தீபிகாவை, அவர்கள் சொந்த ஊரான கோவையிலேயே கட்டிக் கொடுத்திருந்தனர்.தீபிகாவின் கணவனான கேசவன் , ஒரு கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.இவர்களின் செல்வப் புதல்விதான் ஒரு வயதே நிரம்பிய அதிதி குட்டி.கேசவன் வேலை விஷயமாக வெளியூர் சென்றிருந்ததால்  தாய் வீடு வந்திருந்தாள் தீபிகா.


                   அடுத்த அரை மணி நேரத்தில் குளித்து முடித்துக் கிளம்பியவள் ,"அம்மா...! என்ன டிபன்?",என்றபடி உணவு மேசைக்கு வந்து அமர,


                    "இட்லி சுட்டு வைச்சிருக்கிறேன் பாரு....போட்டு சாப்பிடு....!"என்று சமையல் அறையில் இருந்து குரல் கொடுத்தார் மீனாட்சி.


                   அவசர அவசரமாக இரண்டு இட்லியை பிட்டு வாயில் போட்டுக் கொண்டே, "வரேன் மா...பை ப்பா!", என்று கத்திக் கொண்டே வாசலுக்கு வந்தவள், தன் ஸ்கூட்டியை எடுத்துக் கொண்டு கல்லூரிக்கு விரைந்தாள்.


                   அங்கு கல்லூரியில் இவள் ஸ்கூட்டியைக் கண்டவுடனேயே ,"ஹே....!!நித்திவந்தாச்சு......"

என்றபடி ஒரு பட்டாளம் இவளை சூழ்ந்து கொண்டது.


                   "நித்தி....!எக்ஸாம்க்கு படிச்சிட்டியா.....?",என்று கேட்ட நிவேதாவிற்கு ,


                   "ஏதோ படிச்சிருக்கேன் டி....!",என்று இவள் பதில் கூற , இவர்களுக்கு இடையில் வந்த சுமதி, "அவளுக்கென்ன....!அவதான் எப்ப பாரு பர்ஸ்ட் ரேங்க் வாங்கறா......அதெல்லாம் படிச்சிருப்பா....."என்க,


                  "உனக்கு அதுல ரொம்பவும் வருத்தம் போல.....வேணும்னா நீயும் படிச்சு பர்ஸ்ட் மார்க் வாங்கு......"என்றபடி நித்திலாவிற்கு பரிந்து கொண்டு வந்தாள்  நந்தினி.


                   "அப்பா!!பிசாசுகளா....!உங்க பேச்சை அப்புறம் வைச்சுக்கலாம்....இப்ப எக்ஸாம் ஹாலுக்கு போற வழியைப் பார்ப்போம்....",என்று கல்பனா அதட்டல் போட அனைவரும் தேர்வு அறையை நோக்கி நடந்தனர்.


                   பிறகு தேர்வு ஆரம்பம் ஆக,அனைவரும் அதில் கவனமாகி எழுத ஆரம்பித்தனர்.

 

।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।।

 

சென்னை-

                        பணக்காரர்கள் மட்டுமே குடியிருக்கும் அந்தப் பகுதியில் ,வெள்ளைப் பளிங்கால் இழைக்கப்ட்ட அந்த மாளிகை மற்ற பங்களாக்களை விட கம்பீரமாக எழுந்து நின்றது.முன்புறம் புல்வெளியுடன் கூடிய தோட்டம் அமைக்கப்பட்டு கண்ணை கவரும் வகையில் அழகாக இருந்தது அந்த மாளிகை.


                      வீட்டின் உள்ளே ,மாடியில் இருக்கும் தனது அறையில் பொறிக்கப்பட்ட ஆளுயர கண்ணாடியில் தெரிந்த தனது பிம்மத்தைப் பார்த்தபடி,கழுத்து டையை சரி செய்து கொண்டிருந்தான்...ஆதித்யன்.


                      ஆதித்யன்,"ஆதித்யா குரூப் ஆப் கம்பெனிஸின் எம்.டி ...."ஆறடிக்கும் சற்று அதிகமான உயரமும் ,அதற்கேற்ற உடற்கட்டுக்கும் சொந்தக்காரன்.தீர்க்கமான பார்வையுள்ள கண்கள் எதிராளியின் மனதை அக்கு வேறு ஆணி வேறாக அலசி விடும்.'நான் பிடிவாதக்காரன்' என்பதைக் காட்டும் அழுத்தமான உதடுகள்.ஆதித்யனுக்கு கோபம் சற்று அதிகமாகவே வரும்.மனதில் நினைத்ததை அடைந்தே தீரும் அழுத்தக்காரன்.


                     தனது செல்லை காதுக்கு கொடுத்தபடி மாடியில் இருந்து இறங்கி வந்த தன் மகனைக் கண்டதும் எப்பொழுதும் போல் அன்றும் கர்வம் கொண்டார்,சோபாவில் அமர்ந்து அன்றைய நாளிதழை புரட்டிக் கொண்டிருந்த ஆதித்யனின் தந்தை மாணிக்கம்.


                    'இருக்காதா பின்னே'...!' சிறு சிறு உதிரி பாகங்கள் தயாரித்துக் கொடுக்கும் நிறுவனமாக இவர் ஆரம்பித்த தொழில்....ஆதித்யன் கையிலெடுத்தப் பிறகு அசுர வளர்ச்சி அடைந்தது.அந்தத் தொழிலோடு தான் படித்த சிவில் இன்ஜினியரிங் படிப்புக்கும் ஏற்றவாறு கட்டுமான தொழிலையும் ஆரம்பித்தான்.இன்று தமிழ்நாட்டில்  விரல் விட்டு எண்ண கூடிய கோடிஸ்வரர்களில் இவனும் ஒருவன்.


                   "குட் மார்னிங் டாட்....!",என்றவனிடம், "குட் மார்னிங் ஆதி....!என்ன இன்னைக்கு சீக்கிரமாவே ஆபீஸ்க்கு கிளம்பிட்ட போல..?,என்று கேள்வி எழுப்ப,


                    "யா டாட்.....ஒரு முக்கியமான மீட்டிங் இருக்கு...."என்று பதில் சொல்லியபடியே தன் மணிக்கட்டில் கட்டியிருந்த வாட்ச்சில் மணி பார்த்தான்.


                    "ரெண்டு பேரும் ஆரத்தி எடுத்துக்கோங்க....",என்றபடி பூஜை அறையில் இருந்து வெளியில் வந்தார் ஆதித்யனின் தாய்,லட்சுமி.


                     முகத்தில் மஞ்சள் மிளிர,பார்வையில் அன்பும் கருணையும் ததும்ப வந்த தாயைப் பார்த்து சிறு புன்னகையுடன் ஆரத்தியை எடுத்துக் கொண்டான்,ஆதித்யன்.


                    "என்ன லச்சு....?இன்னைக்கு உன் முருகன்ட்ட என்ன மனு போட்ட....?",என்று மாணிக்கம் தன் மனைவியை சீண்ட,


                      "எப்பொழுதும் போல் 'என் கணவனுக்கு நல்ல புத்தியைக் கொடு முருகா!' என்றுதான் வேண்டினேன்...",என்று அவர் பதிலுக்கு வாயாட,


                      'உங்களுக்குத் தேவையா' என்பது போல் பார்த்த மகனின் பார்வையில் இருந்து தப்பிப்பதற்காக படித்துக் கொண்டிருந்த நாளிதழில் தலையைப் புதைத்துக் கொண்டார்,மாணிக்கம்.


                      "நீ வாப்பா...சாப்பிடப் போகலாம்...",அன்பாக மகனை அழைத்தவர்,கணவரிடம் பார்வையை செலுத்தியபடி "சாப்பிட்டுட்டு பேப்பரை பாருங்க...அப்படி என்னதான் அந்த பேப்பரில் இருக்குமோ  தெரியல...எப்ப பாரு அதை வைச்சுகிட்டே உட்காந்து இருக்கீங்க..."என்று அதட்டியபடி சமையல் அறைக்கு சென்றார்.


                    "இதில்தான் எல்லாமே இருக்கு லச்சு...",என்றபடி மனைவியை பின் தொடர்ந்து டைனிங் டேபிளுக்கு சென்றவர்,அங்கு ஏற்கனவே உட்கார்ந்திருந்த மகனிடம் சென்று அமர்ந்து கொண்டார்.


                     எவ்வளவுதான் வேலைக்காரர்கள் இருந்தாலும் தன் மகனுக்கும் கணவனுக்கும் லட்சுமி மட்டும்தான் பரிமாறுவார்.அன்றும் அவர் பரிமாற இருவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.தந்தையும் மகனும் தொழில் விஷயத்தைப் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்க,அதைக் கேட்ட லட்சுமி,"அடாடா...சாப்பிடும் போதும் இந்தப் பேச்சுதானா....?வேற ஏதாவதுதான் பேசுங்களேன்...!",என்று அழுத்துக்கொள்ள,


                      "நான் என்ன பண்ணட்டும் லச்சு...?உன் மகன் பிசினெஸ்ஸை கையில் எடுத்த பிறகு, எனக்கு ரெஸ்ட் கொடுத்து வீட்டுல உட்கார வைச்சுட்டான்...எப்படி பொழுதைப் போக்கதுன்னே தெரியல...",என்று

சலித்துக் கொண்டார்,மாணிக்கம்.


                      "பேசாமல் உன் மகனுக்குக் கல்யாணம் செஞ்சு வைச்சுடு....மருமகள் வந்து பேரப்பிள்ளைகள் பெத்து தந்தால்,அதுக பின்னாடி ஓடறதுலேயே நேரம் போய்டும்...",என்று கூறியபடியே அங்கு ஆஜர் ஆனார் மாணிக்கத்தின் தாய்,கமலாம்பாள்.


                      "சரியா சொன்ன கமலு...!எவ்வளவு நாள்தான் இந்த மூஞ்சிகளையே பார்க்கிறது...?,என்று தன் மனைவிக்கு ஒத்து ஊதியபடியே வந்தார் சுந்தரம்,மாணிக்கத்தின் தந்தை.


                     அனைவரும் ஆவலாக ஆதித்யனின் முகம் பார்க்க அவனோ,"நான்தான்  ஏற்கனவே சொல்லி இருக்கேனே...இப்போதைக்கு கல்யாணப் பேச்சு எடுக்க வேண்டாம்ன்னு...?இன்னும் ரெண்டு வருஷம் போகட்டும்...",என்றான் சற்று கோபமாக.


                    "இப்பவே உனக்கு 28 வயசு ஆச்சு...இன்னும் ரெண்டு வருஷம்னா...எப்ப 30 வயசுல கல்யாணம் பண்ணிக்கிறாயா..?",அவன் அம்மாவும் சற்று கோபமாக கேள்வி கேட்க அவன் சற்று தளைந்து போனான்.


                    "ப்ளீஸ் மா...இன்னும் ஒரு வருஷம் பொறுத்துக்கோங்க...சிங்கப்பூர்ல ஒரு பிரான்ச் ஸ்டார்ட் பண்ணலாம்னு இருக்கேன்...அந்த வேலைகள் முடிஞ்ச பிறகு பார்க்கலாம்.."


                    "சரி!இன்னும் ஒரு வருஷம்தான் உனக்கு டைம்...அதுக்கு அப்புறம் நான் உனக்கு பொண்ணு பார்க்க ஆரம்பிச்சுடுவேன்...!",என்று முடித்து விட்டார் லட்சுமி.


                   எப்படியோ தப்பித்தால் போதும் என்று நினைத்தவன் ,"ஓகே!நான் ஆபீஸ்க்கு கிளம்பறேன்...பை மா...பை டாடி...பை கமலு..!",என்றபடி பாட்டியின் கன்னத்தைப் பிடித்து  இழுத்துவிட்டு ஓடி விட்டான்.


                  "டேய்!என் மனைவியை நான் மட்டும்தான் 'கமலு'ன்னு கூப்பிடுவேன்...உனக்கு அந்த உரிமை இல்லை...",என்று அவனுடைய தாத்தா போர்கொடியைத் தூக்க,


                   "பாரு கமலு....!",என்று முறையிட்டத் தன் பேரனிடம் "நீ கிளம்பு கண்ணு...!உன் தாத்தாவுக்கு வயசு குறைஞ்சிருச்சுன்னு நினைப்பு...நான் பார்த்துக்கிறேன்...",என்று கொஞ்சியபடி அவனை வழியனுப்பி வைத்தார்,அவனது பாட்டி.


                  இதழில் உறைந்த புன்னகையுடன் தன் காரை கிளப்பிக் கொண்டு அலுவலகத்தை நோக்கி விரைந்தான் ஆதித்யன்.


                  பல ஏக்கர் பரப்பளவில் மிக பிரம்மாண்டமாய் விரிந்திருந்தது அவனுடைய அலுவலகம்.அந்த பெரிய கதவை ஒரு சல்யூட்டுடன்  செக்யூரிட்டி திறந்து  விட,அவனுடைய கார் வழுக்கிக் கொண்டு உள்ளே நுழைந்தது.


               அலுவலகத்திற்குள் நுழைந்த உடனேயே அவனுடைய முகம் சிறிது கடினத்தை தத்தெடுத்துக்  கொண்டது.அனைவரும் கூறிய வணக்கங்களை சிறு தலையசைவுடன் ஏற்றுக் கொண்டு தனது அறையை நோக்கி விரைந்தான்.


               உள்ளே நுழைந்தவனை அடுத்தடுத்து வேலைகள் ஆக்கிரமித்துக் கொள்ள,"குட் மார்னிங் ஆதி..!"என்ற கௌதமின் குரலில்தான் நிமிர்ந்தான்.


               கெளதம்,ஆதித்யனின் உயிர் நண்பன்.சிறு வயதில் இருந்தே இருவரும் ஒன்றாக படித்தவர்கள்.இருவருக்கும் இடையில் நெருங்கிய நட்பு உண்டு.ஆதித்யன் தனது தாத்தா பாட்டிக்குப் பிறகு நெருங்கிப் பழகும் ஒரே ஆள் கௌதம்தான்.


                "குட் மார்னிங் டா...!",என்று கௌதமைப் பார்த்து புன்னகைத்தவன் ,"இன்னைக்கு மீட்டிங்கிற்கு எல்லாம் ரெடியா...?",என்று கேள்வி எழுப்ப,


                 "எல்லாம் ரெடி!நீ வந்தால் ஸ்டார்ட் பண்ணிடலாம்...எல்லாரும் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்காங்க..",என்று கூற,இருவரும் மீட்டிங் நடக்கும் அறையை நோக்கி நடந்தனர்.


                  ஆதித்யன் உள்ளே நுழையவும் அனைவரும் எழுந்து நின்றனர்.சிறு கையசைப்புடன் அனைவரையும் அமர சொன்னவன்,தன் பேச்சைத் தொடங்கினான்.


                     "ஹாய் கைஸ்...!இன்னைக்கு ஒரு முக்கியமான விஷயம்  பத்தி பேசுவதற்காகத்தான் இந்த மீட்டிங் அரேன்ஞ் செய்யப்பட்டிருக்கிறது.அமெரிக்காவில் இருக்கும் ஒரு நிறுவனம் சென்னையில் மால் கட்டுவதற்கான ப்ரொஜெக்ட்டை நம்மிடம் கொடுத்துள்ளது.அவங்க இன்னும் நிறைய பில்டிங்ஸ் இங்க கட்ட பிளான் போட்டு இருக்காங்க.நாம மட்டும் இந்த ப்ரொஜெக்ட்டை நல்லபடியா முடிச்சுக் கொடுத்தோம்னா...அவங்களுடைய மத்த எல்லா ப்ரொஜெக்ட்டும் நமக்கே கிடைக்கும்.உங்களுக்கு எல்லாம் என்னன்ன வேலை அலாட் பண்ணி இருக்குன்னு நம்ம ஜி.எம் கௌதமைக் கேட்டுக்கோங்க.நீங்க எல்லோரும் இந்த ப்ராஜெக்ட் வெற்றி பெற சப்போர்ட் பண்ணுவீங்கன்னு நம்பறேன்...!",கம்பீரமாக தன் பேச்சை முடித்தான் ஆதித்யன்.


                      "நிச்சயமாக சார்...!",ஊழியர்கள் அனைவரும் மறுமொழி கூற இனிதாக முடிந்தது அந்த மீட்டிங்.அதன் பிறகு அனைவரும் கௌதமிடம் சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட்ட வேலைகளை கேட்டுக்கொண்டு அவரவர் இடத்திற்கு சென்றனர்.


                       கௌதமோடு தன் அறைக்கு வந்த ஆதித்யன்,"கெளதம்...!நீ அடிக்கடி பில்டிங் கட்டற இடத்துக்கு போக வேண்டி இருக்கும்...ஸோ,ஒர்க்கர்ஸ் எல்லாம் அவங்களோட வேலையை ஒழுங்கா பண்றாங்களான்னு மேற்பார்வை பார்க்கிற பொறுப்பை உனக்கு நம்பிக்கையான ஆளிடம் கொடுத்திடு....",எனக் கூற ,அதை ஆமோதித்தவாறு கெளதம் தனது அறைக்குச் செல்ல, ஆதித்யன் தனது வேலைகளில் மூழ்கினான்.

 

 அகம் தொட வருவான்....

கருத்துகள்

கருத்துரையிடுக