எவனோ என் அகம் தொட்டு விட்டான் - அகம் 57

 அத்தியாயம் 57 :

 

"கொஞ்சம் தள்ளித்தான் உட்காருங்களேன்....!",தன்னருகே பசை போட்டு ஓட்டியதைப் போல்  உரசிக் கொண்டு அமர்ந்திருந்த ஆதித்யனைப் பார்த்து பல்லைக் கடித்தாள் நித்திலா.

 

"நீ சொன்ன பிறகு...நான் தள்ளி உட்காராம இருப்பேனா பேபி....!",அவள் காதருகில் கிசுகிசுத்தவன் அவளிடம் நெருங்கி ஒட்டி உரசிக் கொண்டு அமர்ந்தான்.

 

"அய்யோ...!நான் அந்தப் பக்கம் தள்ளி உட்கார சொன்னேன்....!",அதற்கு மேல் நகர்ந்து அமர முடியாதபடி கார்க்கதவு அவளைத் தடுக்க...முன்னால் காரை ஓட்டிக் கொண்டிருந்த கேசவனுக்கும்...அவனருகில் அமர்ந்திருந்த தீபிகாவிற்கும் எதுவும் கேட்டு விடக் கூடாது என் மெல்லிய குரலில் முணுமுணுத்தாள்.

 

"எனக்கு இந்த பக்கம்தான் வசதி பேபி....!",என்றபடி மேலும் ஒட்டி உராய்ந்தவனைக் கண்டு அவளால் பல்லைக் கடிக்கத்தான் முடிந்தது.

 

ஆதித்யனும்...நித்திலாவும் மறு வீட்டு விருந்திற்காக கோவை வந்து ஒரு நாளாகிறது.வீட்டு மாப்பிள்ளை என்ற முறையில் எந்தவொரு குறையும் வைக்காமல் பார்த்து பார்த்து உபசரித்தார் மீனாட்சி.ஆனால்...மகளிடம் முகம் கொடுத்துக் கூட பேச மறுத்துவிட்டார்.ஆதித்யனிடம் கூட...மருமகன் என்ற முறையில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசியவர்....நித்திலாவிடம் அதையும் பேசவில்லை.

 

கேசவனும்...தீபிகாவும் அதிதி குட்டியுடன் வந்திருந்தனர்.இரண்டு மகள்களும்...இரண்டு மாப்பிளைகளும் சேர்ந்து வீடே கலகலப்பாக இருந்தது.இன்று...அதிதி குட்டியை பெரியவர்களிடம் விட்டு விட்டு...சிறியவர்கள் நால்வரும் கோவை குற்றாலம் கிளம்பி விட்டனர்.

 

நித்திலா...ஆதித்யனிடம் தள்ளி அமரச் சொல்லி முறைத்துக் கொண்டிருக்கும் போதே...கார் கோவை குற்றாலத்துக்குள் நுழைந்தது.நால்வரும் இறங்கி நுழைவுக் கட்டணம் வாங்கிக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.

 

இருபுறமும் மரங்கள் சூழ்ந்த ரம்மியமான காட்டு பாதையில் சிறிது தூரம் நடந்து சென்ற பிறகுதான் அருவியைக் காண முடியும்.அந்தப் பயண தூரத்திற்கும் சுற்றுலாத்துறை சார்பாக பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.நால்வரும் அதை மறுத்து விட்டு நடந்தே சென்றனர்.

 

கேசவனும்...தீபிகாவும் கை கோர்த்தபடி முன்னால் சென்று விட....இவர்கள் இருவரும் பின்னால் வந்தனர்.மெலிதாக மழை சாரல் வீசிக் கொண்டிருக்க....அதில் நனைந்தபடி...உடலைத் தழுவும் சில்லென்ற காற்றில் நடப்பது ஏகாந்தமான சூழலைத் தோற்றுவித்தது.அதோடு....மனதுக்குப் பிடித்தவர்களின்  அருகாமை வேறு...!இருவரும் அந்த நிமிடங்களை ரசித்தபடி...மௌனமாய் நடந்தனர்.

 

அருவி என்று சொல்லிவிட முடியாது.சற்று நீண்ட பாறையில் இருந்து 'சோ'வென்று நீர் கொட்டிக் கொண்டிருந்ததே...அருவி போலொரு தோற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.அருவியிலிருந்து சொட்டி கீழே இறங்கிய நீர்...ஆறைப் போல் ஓடிக் கொண்டிருந்தது.அவ்வளவாக கூட்டம் இல்லை.அங்கொருவர் இங்கொருவராக சிலரே விளையாடிக் கொண்டிருந்தனர்.

 

அருவியைக் கண்டதும்,"ஒகே ஆதி....!நான் என் பொண்டாட்டியோட உத்தரவு வாங்கிக்கிறேன்....!நீ உன் பொண்டாட்டியோட என்ஜாய் பண்ணு....!",என்றபடி தீபிகாவைத் தள்ளிக் கொண்டு அருவிப் பக்கம் சென்று விட்டான் கேசவன்.

 

அவனுக்கு அவன் கவலை....!குழந்தை பிறந்ததில் இருந்து இருவரும் இணைந்து எங்கேயும் வெளியே சென்றிருக்கவில்லை.இன்று...வாய்ப்பு கிடைக்கவும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டான்.

 

"ஏய்...!தீபிகா....!இருடி...!நானும் வர்றேன்....!",கத்தியபடியே அவர்கள் பின்னால் செல்லப் பார்த்த நித்திலாவைக் கையைப் பிடித்து தடுத்தான் ஆதித்யன்.

 

"கையை விடுங்க....!அவங்க போறாங்க பாருங்க...!",அவள் கூறிக் கொண்டிருக்கும் போதே...அவர்கள் இருவரும் அருவி நீருக்குள் சென்று மறைந்தனர்.

 

"அடியே என் மக்கு பொண்டாட்டி...!அவங்களே தனியா டைம் ஸ்பெண்ட் பண்ணறதுக்காக...நம்மளை கழட்டி விட்டுட்டு எஸ்கேப் ஆகிட்டாங்க....!இதுல கரடி மாதிரி நீயும் பின்னாடி போறேன்னு சொல்ற....!",அவன் கூறவும்தான் அவளுக்கு உரைத்தது.

 

"ஓ....!",அவள் இழுக்க..

 

"என்ன 'ஓ..'!இது கூட தெரியலை...?உன்னையெல்லாம் வைச்சுக்கிட்டு....",அதற்கு மேல் எதையோ அவன் வாய்க்குள்ளேயே முணுமுணுக்க..

 

அவனது முணுமுணுப்பை அவள் கவனித்தாலும்...என்ன முணுமுணுக்கிறான் என்றுதான் காதில் விழவில்லை.

 

"சரி...சரி...!போதும்...!இதுதான் சாக்குன்னு என்னை மட்டம் தட்டாதீங்க....!",முறைத்துக் கொண்டிருந்தவளின் விழிகளில்...அருவியில் இருந்து வழிந்து ஆறு போல் ஓடிய நீர் விழுந்தது.

 

"வாவ்....!ஆது....!அந்த இடம் நல்லாயிருக்கல்ல....!அங்கே போய் விளையாடலாமா....?",நொடியில் முறைப்பை மறைந்து சிறு குழந்தையாய் ஆர்பரித்தவளைக் கண்டவனின் மனம் காதலால் கனிந்தது.

 

"நீ கேட்டு நான் மறுப்பேனா பேபி....?",அவளை அங்கு அழைத்துச் சென்றான்.இருவரும் நீரில் இறங்கி விளையாட ஆரம்பித்தனர்.

 

சிறு குழந்தை போல்...தண்ணீரை கைகளால் அள்ளி...மேல் நோக்கி வீசியபடி விளையாடியவளைக் கண்டவனுக்கு ஆசை ஆசையாய் வந்தது.தன்னையே பார்த்துக் கொண்டிருந்த ஆதித்யனின் மேல்...குறும்பாய் நீரை வாரியிறைக்க...அதில் தன்னிலைக்கு வந்தவன்,

 

"ஏய்ய்...!ஃபிராடு....!",சிரித்தபடியே அவள் மேல் திருப்பி நீரை இறைத்தான்.ஒருவர் மேல் ஒருவர் நீரை வாரியிறைத்துக் கொண்டு...இளம் காதலர்களாய் குதூகலித்துக் கொண்டிருந்தனர்.

 

ஒரு கட்டத்திற்கு மேல் சோர்ந்து போனவளாய்,"போதும் ஆது....!",என்றபடி விளையாட்டை நிறுத்தினாள்.

 

"ஏன் பேபி....!இவ்வளவு ஆசையா விளையாடற...?இப்போத்தான் முதல் முறை இங்கே வர்றியா...?",

 

"ம்ம்...இங்கேதான் இருக்கிறேன்னு பேரு...!ஆனால்...இன்னும் இங்கே வந்ததில்லை...!இந்த மாதிரி அருவி...ஆறுகெல்லாம் அம்மா விட மாட்டாங்க....!",

 

"ஓ....",

 

"ஆது...!உங்களுக்கு நீச்சல் தெரியுமா....?",திடீரென்று அவனைப் பார்த்து வினவினாள் அவள்.

 

"ம்....!தெரியும்....!",

 

"ஹை....ஜாலி....!அப்போ எனக்கு கத்து கொடுக்கறீங்களா....?",தன் இரு கைகளையும் தண்ணீரில் அடித்தபடி குதூகலித்தவளை...ஒரு மார்க்கமாக பார்த்தவன்..

 

"கத்து கொடுக்கிறேன் பேபி....!ஆனால்...இங்கே இல்ல...!நம்ம வீட்டு நீச்சல் குளத்துல கத்துக் கொடுக்கிறேன்...!"என்றான்.

 

"ம்ஹீம்....!இல்லல்ல....!இப்பவே...இங்கேயே கத்துக் கொடுங்க....!",அவள் அடம்பிடித்ததில்...'இவள் புரிந்துதான் பேசறாளா....?',என மனதிற்குள் நினைத்தபடி அவளை ஒரு மார்க்கமாக பார்த்து வைத்தான்.

 

"புரிஞ்சுக்கடி...!இங்கேயெல்லாம் கத்துக் கொடுக்க முடியாது...!நம்ம சென்னைக்குத் திரும்பியதும் முதல் வேலை...உனக்கு நீச்சல் கத்துக் கொடுக்கறதுதான்....!ஒகே வா....?",அவன் கூறிய சமாதானத்தில் அவள் அப்போதைக்கு அமைதியானாள்.

 

"நாமளும் அருவிக்கு போகலாமா....?",ஆர்வத்துடன் வினவியவளை அழைத்துக் கொண்டு அருவிப் பக்கம் சென்றான்.

 

ஆர்பரித்துக் கொட்டும் அருவியில் இருவரும் நனைந்தனர்.நித்திலாவைத் தன் இடையோடு சேர்த்து அணைத்தபடி...தன் கையணைவில் வைத்துக் கொண்டே அருவியில் நனைந்தான் ஆதித்யன்.ஒருவரின் அருகாமை மற்றொருவருக்குள் காதல் தீயை மூட்டி விட்டது...!இருவருக்குள்ளும் பற்றியெரிந்த மோகம் என்னும் நெருப்பை...அந்த குளிர்ந்த அருவியால் கூட அணைக்க முடியவில்லை...!

 

வேட்கையோடு அவன்...அவளது இடையைப் பற்றியிருந்த தனது கரங்களில் அழுத்தத்தைக் கூட்ட...அதில் சுதாரித்தவளாய் அவனை விட்டு விலகி...அருவி நீரில் இருந்து வெளிவந்தாள் நித்திலா.வெகு நேரம் தாபம் தனியாதவனாய் அந்த அருவி நீரில் நனைந்து விட்டுத்தான் வெளிவந்தான் ஆதித்யன்.

 

சிறிது நேரத்தில் கேசவனும்...தீபிகாவும் வந்து இவர்களுடன் இணைந்து கொள்ள...நால்வரும் காரை நோக்கி நடந்தனர்.வீசிய மெல்லிய காற்றில் நால்வரது உடைகளும் உலர்ந்து போயிருந்தன.வழியிலிருந்த தோப்பு ஒன்றில் காரை நிறுத்தி...மீனாட்சி கட்டி கொடுத்திருந்த டிபன் வகைகளை சாப்பிட்டு விட்டுக் கிளம்பினர்.

 

அன்று...ஆதித்யனும்..நித்திலாவும் ஊருக்கு கிளம்பும் நாள்.நிறைய பலகாரங்களை தன் கையாலேயே செய்து...பல டப்பாக்களில் அடைத்து...கார் டிக்கியை நிறைத்திருந்தார் மீனாட்சி.அவளுக்குத் தேவையான அனைத்தையும் அவர் பார்த்து பார்த்து செய்தாலும்....நித்திலாவிடம் வாயைத் திறந்து ஒருவார்த்தை பேசவில்லை.

 

மாமியாரின் கோபத்தையும்...தனது மனைவியின் முக வாட்டத்தையும் கவனித்துக் கொண்டுதான் இருந்தான் ஆதித்யன்.நித்திலா குளித்துக் கொண்டிருக்கும் போது...மீனாட்சியைத் தேடி சமையலறைக்குச் சென்றான்.

 

"அத்தை....!",

 

அடுப்பில் எதையோ கிளறிக் கொண்டிருந்த மீனாட்சி...மாப்பிள்ளையின் குரலில் அவசர அவசரமாகத் திரும்பிப் பார்த்தார்.

 

"சொல்லுங்க மாப்பிள்ளை...!குடிக்க ஏதாவது வேணுமா...?",மாமியாராய் உபசரிக்க..

 

"இல்லைங்க அத்தை...!நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்...!",ஆதித்யனின் குரலில் இருந்த உறுதியில்...அவர் யோசனையுடன் அடுப்பை அணைத்து விட்டு அவன் முகம் நோக்கினார்.

 

"நிலா மேல உங்களுக்கு இருக்கிற கோபத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது...!உங்க ஆதங்கம் நியாயமானதுதான்....!ஆனால்...நான் உங்ககிட்ட ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்ல விரும்பறேன்...!நீங்க அவள் மேல வைத்த நம்பிக்கைக்கு அவள் துரோகம் பண்ணலை...!உங்க மகளா...அவள் உங்க நம்பிக்கையை காப்பாற்றியிருக்கிறாள்...!இதை மட்டும்தான் என்னால சொல்ல முடியும்....!உங்கள் மகளுக்கு நீங்க கொடுக்கிற தண்டனை அதிகம்தான்...!",அவர் முகம் பார்த்து உரைத்தவன்....அதற்கு மேல் ஒன்றும் சொல்லாமல் தங்களது அறைக்குள் புகுந்து கொண்டான்.

 

மருமகனது பேச்சில் ஸ்தம்பித்துப் போய் நின்றிருந்த மீனாட்சியின் தோளில் ஆறுதலாக கை வைத்தார் கிருஷ்ணன்.

 

"என்னங்க...!",அதற்கு மேல் அவராலும் தன் கணவரிடம் எதையும் பேச முடியவில்லை.

 

"மாப்பிள்ளை சொன்னதை கேட்டுக்கிட்டுத்தான் இருந்தேன் மீனு...!உன்னால ஏன் நம்ம பொண்ணு மேல நம்பிக்கை வைக்க முடியலை...?ஏதோ நடந்திருக்கு டி....!அதை நம்மகிட்ட கூட நம்ம பொண்ணால சொல்ல முடியலை....!",

 

"என்னங்க சொல்றீங்க....?ஆனால்...ரெண்டு பேரையும் பார்க்கும் போது...இது கட்டாயத்துக்காக நடந்த கல்யாணம் மாதிரி தெரியலையே....?இரண்டு பேரோட கண்களிலேயும் காதல் தெரியுது....!",குழப்பமாக வினவிய மனைவியை ஆதுரத்துடன் நோக்கியவர்,

 

"இரண்டு பேரும் ஒருத்தர் மேல ஒருத்தர் உயிரையே வைச்சிருக்காங்க மீனு...!அதுல எந்த சந்தேகமும் இல்ல...!அதே சமயம்...நம்ம பொண்ணு நம்மளை மீறி கல்யாணம் பண்ணவும் மாட்டாள்...!அதனாலதான் சொல்றேன்...ஏதோ நடந்திருக்கு...!",என்றார் யோசனையுடன்.

 

"அதை நம்மகிட்ட சொன்னால்தான் என்ன...?",சற்று ஆற்றாமையோடு வினவினார் மீனாட்சி.

 

"இல்லை டி...!ஒரு சில விஷயங்களை பெத்தவங்ககிட்ட கூட சொல்ல முடியாது....!நம்ம பொண்ணு...அந்த வீட்டுமருமகளா யோசித்திருக்கிறாள்....!மாப்பிள்ளையுடைய மனைவியா நடந்திருக்கிறாள்....!நம்ம பொண்ணு வளர்ந்திட்டாள் டி....!",ஆனந்தக் கண்ணீருடன் கூறிய கணவரின் தோளில் சாய்ந்து கொண்டார் மீனாட்சி.

 

அவரும் ஒரு வீட்டின் மருமகள் தானே....!பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டிற்கு வந்து இத்தனை வருடங்கள் வெற்றிகரமாக குடும்பம் நடத்தியவர்தானே...!தன் மகளின் எண்ணங்களைப்  புரிந்து கொண்டார்.

 

"வர்றேன் டி...!வர்றேன் மாமா...!",கேசவனிடமும்...தீபிகாவிடமும் விடைபெற்றுக் கொண்டு தனது அப்பாவிடம் வந்தாள் நித்திலா.

 

ஆதித்யனையும் நித்திலாவையும் வழியனுப்புவதற்காக அனைவரும் வாசலில் குழுமியிருந்தனர்.

 

நித்திலாவினால் தன் தந்தையின் முகத்தைப் பார்க்கவே முடியவில்லை.வேலைக்கு என்று இவ்வளவு காலம் வீட்டை விட்டு பிரிந்திருந்தாலும்...இப்பொழுது...திருமணம் முடிந்து பிரிந்து செல்வது என்பது வேதனையைத் தந்தது.

 

"போய்ட்டு வர்றேன் ப்பா...!",கண்ணீருடன் தன் முன் வந்து நின்ற மகளைக் கண்டவருக்கு அதற்கு மேல் முடியவில்லை.அவளை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார் அந்த தந்தை.

 

"போய்ட்டு வாடா....!",அவரது கண்கள் கண்ணீரைப் பொழிந்தது.அவரது உதடுகளோ புன்னகையுடன் மகளை வழியனுப்பியது.

 

"சரி....!போதும்...!பொண்ணை வழியனுப்பும் போது இப்படித்தான் கண்ணீரோட வழியனுப்புவாங்களா...?",மீனாட்சியின் அதட்டலில் இருவரும் தங்களது கண்களைத் துடைத்துக் கொண்டனர்.

 

"அம்மா...!",பாசத்திற்கு ஏங்கும் கன்றாய் அவள்...தன் தாயின் முகம் காண...அவ்வளவுதான்...அடுத்த நொடி...தன் கோபத்தையெல்லாம் மறந்தவராய்...தன் இரு கைகளையும் விரித்து மகளை 'வா'வென்று அழைத்திருந்தார்.

 

ஓடிச் சென்று அவரைக் கட்டிக் கொண்ட நித்திலாவின் உதடுகளில் இருந்து,"ஸாரி ம்மா...!எ..என்னை மன்னிச்சிடுங்க....!",என்ற வார்த்தைகள்தான் தேம்பலுக்கு இடையே வந்து விழுந்தன.

 

தன் மகளின் முகத்தை நிமிர்த்தி...அவளது விழிநீரை துடைத்து விட்டவர்,"எதுக்கு இந்த மன்னிப்பு....?என் பொண்ணைப் பற்றி எனக்குத் தெரியும்...!முதல்ல அழறதை நிறுத்து...!உன் வாழ்க்கையை நீ தொடங்கப் போகிற போது அழக் கூடாது...!",மென்மையாய் அறிவுறுத்தினார் அவர்.

 

"அம்மா...!என் மேல உங்களுக்கு கோபம் இல்லையே....?",

 

"என் பொண்ணு மேல எனக்கு கோபம் வருமா....?நீ சந்தோஷமா இருக்கணும் டா....!மாப்பிள்ளை மனசைப் புரிஞ்சு நடந்துக்கோ....!இனி...அவருடைய குடும்பம் தான் உன்னுடைய குடும்பம்....!",ஒரு தாயாய் அவர் அறிவுரை கூற...தலையை ஆட்டி கேட்டுக் கொண்டாள் நித்திலா.

 

ஒரு வழியாக...அனைவரிடமும் கண்ணீருடன் விடைபெற்றுக் கொண்டு..ஆதித்யனின் கையைப் பிடித்தபடி காரில் ஏறினாள் நித்திலா.காரை ஓட்டுவதற்கு ட்ரைவரை நியமித்திருந்தான் ஆதித்யன்.ட்ரைவர் காரை எடுக்க...தன் பார்வை வட்டத்திலிருந்து அனைவரும் மறையும் வரை எட்டி எட்டி பார்த்துக் கொண்டே வந்தாள் நித்திலா.

 

அவளது உணர்வுகளைப் புரிந்து கொண்டு...ஒன்றும் பேசாமல் அமைதியாய் அவளைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டான் அவளது கணவன்.அவனது மார்பில் சாய்ந்து வெகு நேரம் தேம்பிக் கொண்டே வந்தவள்...பிறகு அயர்ச்சியில் கண்ணுறங்கி விட்டாள்.

 

அவளது தூக்கம் கலையாதவாறு அவளைத் தன் மடியில் படுக்க வைத்தவன்...மென்மையாக அவள் முடி கோதி நெற்றியில் இதழ் பதித்தான்...காதலாக...!

 

*******************************************************

 

"சந்தியாக் கால மேகங்கள்

பொன்வானில் ஊர்வலம் போகுதே....!

பார்க்கையில் ஏதோ நெஞ்சிலே...

உன் நடையின் சாயலே தோன்றுதே...!",

 

பாடலை முணுமுணுத்துக் கொண்டே பாத்திரங்களைக் கழுவிக் கொண்டிருந்த சுமித்ராவின் இடையை...இரு வலிய கரங்கள் அணைத்தன.திரும்பிப் பார்க்காமலேயே அவளுக்குத் தெரிந்தது...அது தன் மணாளன்தான் என்று....!

 

"என்ன டி பாட்டெல்லாம் பலமா இருக்கு....?",அவளது தோள் வளைவில் முகம் புதைத்து...அவளைப் பார்த்தபடி கெளதம் வினவ...அவனை நோக்கி ஒரு காதல் புன்னகையைச் சிந்தியவள்...மேலும் பாட ஆரம்பித்தாள்.

 

"தூரத்தில் நீ வந்தாலே

என் மனசில் மழையடிக்கும்...!

மிகப் பிடித்த பாடலொன்றை

உதடுகளும் முணுமுணுக்கும்...!",

 

காதலோடு அவன் முகம் பார்த்துப் பாடியவளின் காதலில்...அவன் கொள்ளை போனான்.

 

"கொல்றே டி...!",கிறக்கத்துடன் கூறியபடியே அவளது தோள் வளைவில் முத்தம் பதித்தான்.

 

"இன்னைக்கு என்ன விஷயம்...?என்னுடைய மாமா சீக்கிரமே ஆபிஸ்ல இருந்து வந்துட்டாங்க...!",கணவனது தீண்டலில் சிலிர்த்தபடியே வினவினாள் சுமித்ரா.

 

"என்னுடைய பொண்டாட்டிக்கு பிடிச்ச ஒண்ணை கொடுக்கலாம்ன்னு ஓடி வந்துட்டேன்....!",

 

"அப்படியா....!உங்களுடைய பொண்டாட்டிக்கு அவளுடைய மாமாவைத்தான் ரொம்ப பிடிக்குமாம்...!",கழுவிக் கொண்டிருந்த பாத்திரங்களை மறந்தவளாய்...திரும்பி நின்றபடி அவனது கழுத்தில்...தனது கைகளை மாலையாக்கி...அவனைத் தன்னை நோக்கி இழுத்தாள் அவள்.

 

"அப்போ...அவளுடைய மாமனையே மொத்தமா கொடுத்துதுட்டா போச்சு...!",அவள் இஷ்டத்திற்கு வளைந்து கொடுத்தபடியே கூறியவனின் கரங்கள்...அவளது இடையில் அழுத்தமாகப் பதிந்து படர்ந்தன.

 

ஒரு கணம் விழிகளை மூடி...அவன் கரங்கள் ஏற்படுத்தும் குறுகுறுப்பை ரசித்தவள்...பிறகு,"அதுக்கு இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்கணும் மாமா....!",குறும்பாகக் கூறியபடியே அவன் கைகளைத் தட்டி விட..

 

"ம்ம்...தெரியும்....!",முணுமுணுத்தவன் தான் மறைத்து வைத்திருந்த ஒரு ஸ்வீட் பாக்ஸை எடுத்து அவள்முன் நீட்டினான்.

 

"ஹை....ஸ்வீட்....!",ஆசையுடன் அதைப் பிரித்துப் பார்த்தவள் உற்சாகமாகக் கூச்சலிட ஆரம்பித்தாள்.

 


"வாவ்....!எனக்கு பிடிச்ச ரசமலாய்....!",ஆசையுடன் விழிகளை விரித்தவளின் இமைகளின் மீது முத்தம் இட்டவன்..

 

"என் ஹனிக்காகத்தான் இந்த ரசமலாய்....!",அவன் கூறிக் கொண்டிருக்கும் போதே...அவனது மொபைல் அலற,"ஒரு நிமிஷம் டா....!",மொபைலை காதுக்கு கொடுத்த படி தங்களது அறைக்குள் நுழைந்தான்.

 

அலைபேசி உரையாடலை முடித்து விட்டு...கெளதம் உடைமாற்றி வரும் போது...சுமித்ரா ஹால் சோபாவில் அமர்ந்து கிண்ணத்தில் இருந்த ரசமலாயை மொக்கிக் கொண்டிருந்தாள்.

 

"என் ஹனிக்கு ரசமலாய் பிடிச்சிருக்குதா....?",வினவியபடியே அவன்...அவளருகில் வந்து அமர..

 

"ம்ம்...!சூப்பர் மாமா....!"தன் நாவை சுழற்றியபடியே கூறியவள்,"நீங்க சாப்படறீங்களா....?",என்று வினவ..

 

அவனோ...அவளையே பார்த்தபடி 'ஆமாம்...!' என்பதாய் தலையசைத்தான்.

 

"இருங்க...!நான் போய் எடுத்துட்டு வர்றேன்....!",எழ போனவளின் கை பிடித்து மீண்டும் அமர வைத்தவன்..

 

"எனக்கு அந்த ரசமலாய் வேண்டாம்...!இந்த ரசமலாய் தான் வேணும்....!",அப்பொழுதுதான் முழுதாக ஒரு ரசமலாயை வாயில் போட்டதால்...சர்க்கரைப் பாகில் பளபளத்த அவளது இதழ்களை வெட்கமில்லாமல் மொய்த்தது அவனுடைய பார்வை.

 

அவனது பார்வையில் அவள்,"வே...வேண்டாம்....!",என்றபடி பின்னால் சாய்ந்தாள் அவள்.

 

"ம்ஹீம்....!எனக்கு வேணும்...!",அவன்...அவள் மீது சாய..அவள் அப்படியே சோபாவில் சரிந்தாள்.

 

சோபாவில் சரிந்தவளின் மேல் படர்ந்தவன்,"ஹனி ரசமலாய்....!",கிசுகிசுத்தபடியே அவன்..அவள் இதழ் நோக்கி குனிய...அவள் விழிகளை மூடிக் கொண்டாள்.

 

அவளது இதழ்களோடு...தன் உதடுகளை இழைத்தவன்...தேன் சிந்தும் அவளது அதரங்களில் இருந்து தேனெடுக்கும் பணியை மும்முரமாய் ஆற்ற...அந்தப் பாவையோ அவனது பின்னந்தலை முடியை இறுகப் பற்றியபடி அவனுக்கு இழைந்து கொடுத்தாள்.

 

வெகு நேரம் அவளது இதழ்களின் மென்மையில் கரைந்திருந்தவன்...நிமிரும் போது...அவள் வாயில் இருந்த ரசமலாய்...அவனது வாய்க்குள் இடம் பெயர்ந்திருந்தது.

 

"செம டேஸ்ட்டு டி....!",தன் உதடுகளை நாவால் சுழற்றியபடியே அவன் கூற..

 

"ச்சீய்...!திருடா....!",முகம் சிவக்க வெட்கப்பட்டாள் அவள்.

 

"திருடனா...?எனக்கெல்லாம் எந்தப் பொருளையும் திருடி பழக்கம் இல்லைம்மா....!"அவன் குறும்பாய் கண் சிமிட்ட..

 

"கள்ளா...!இப்போ திருடினதுக்கு பெயர் என்னவாம்...?",செல்லமாய் சிணுங்கினாள் அந்த மங்கை.

 

"அப்போ...திருடியதை திருப்பிக் கொடுத்திட வேண்டியதுதான்....!",கூறியவன் கிண்ணத்தில் இருந்த ரசமலாயை எடுத்து வாயில் போட்டபடி...மீண்டும் அவள் இதழ்களை நெருங்க..

 

 

"ச்சீய்....!வே..வேண்டாம்....!",வார்த்தைகளை முடிப்பதற்குள்ளேயே அவளது இதழ்களைக் கவ்வியிருந்த அந்தக் கள்வன்...அவளிடம் இருந்து திருடியதை அவளிடமே திருப்பி ஒப்படைத்த பிறகுதான் நிமிர்ந்தான்.

 

"பொறுக்கி....!",அவளது இதழ்கள் அவளையும் அறியாமல் சப்புக் கொட்டியது.

 

"எப்படி....செம டேஸ்ட்டா இருக்கல்ல....?",கண்ணைச் சிமிட்டியபடி அவன் வினவ..

 

"ம்ம்....!",நாணத்தில் சிவந்தபடியே அவன் நெஞ்சில் தன் முகத்தை மறைத்துக் கொண்டாள்.அவனிடமிருந்து அட்டகாசமான சிரிப்பு ஒன்று எழுந்தது.

 

அவளது மார்பின் மீது படுத்துக் கொண்டு...அவனுக்காய் துடிக்கும் அவளது இதயத்துடிப்பை அவதானித்தபடி...விழிகளை மூடியிருந்தான் கெளதம்.தன் நெஞ்சத்தையே மஞ்சமாக்கித் தனது மன்னனுக்கு கொடுத்திருந்தவள்...அவனது தலைமுடியைக் கோதியபடி விழிகளை மூடியிருந்தாள்.

 

இந்த ஆலிங்கனம்தான் எவ்வளவு அழகானது....!அவளது இதயத்துடிப்பை அவன் செவிமடுக்க...அவனை ஒரு குழந்தையாய் தன் மார்பில் ஏந்தி...தனக்குள் அடக்கி வைத்திருக்கும் பெண்ணவளது ஆலிங்கனம் மிகவும் அற்புதமானது....!காதலோடு தாய்மையும் கலந்திருப்பது....!

 

"மாமா....!",மெல்ல அவள் அழைக்க..

 

"ம்...!",மயக்கத்துடன் 'உம்' கொட்டினான் அவன்.

 

"திவி காலேஜ் டூர் போயிருக்கிறது உங்களுக்கு ரொம்பவும் வசதியா போச்சு....!வர வர உங்க குறும்பு அதிகமாகிட்டே போகுது....!",அவளது குரல் செல்ல கண்டிப்புடன் வெளிவந்தது.

 

"நீதான் மெயின் டிஷ் வேண்டாம்ன்னு சொல்லிட்ட....!அட்லீஸ்ட்...அப்பப்ப சைட் டிஷ்ஷையாவது எனக்கு கொடுக்கணும்ல....?",

 

"ஆமா....!நான் பாவம் பார்த்து சைட் டிஷ் கொடுத்தேன்னு வையுங்க....!அப்புறம்...நீங்க இலை போட்டு விருந்து சாப்பிட ஆரம்பிச்சுடுவீங்க....!",முணுமுணுத்தாள் அவள்.

 

"என்ன டி முணுமுணுக்கிற....?",

 

"ஹ....ஒண்ணுமில்ல....!ஆதி அண்ணாக்கிட்ட பேசுனீங்களா...?நித்தியுடைய கோபம் குறைஞ்சுதா....?",

 

"ஏன்....?நீ உன் பிரெண்டுகிட்ட பேசலையா....?",

 

"பேசினேன் மாமா....!'எனக்கு விருப்பமில்லைன்னு தெரிந்தும்...அவரு எப்படி இந்தக் கல்யாணத்தை நடத்தலாம்..'ன்னு அவள்...அவளுடைய பிடியில நிற்கிறா....!",

 

"ஆதி மனசில என்ன இருக்குன்னு கண்டுபிடிக்கவே முடியலை டி....!ஆனால்...நிச்சயமா நித்திலா மேல கோபம் இல்ல....!பார்ப்போம்....!போக போக எல்லாம் சரியாகிடும்...!அவன் வாழ்க்கையை அவன் பார்த்துக்குவான்....!",சிறிது நேரம் இருவருக்குள்ளும் அமைதி நிலவியது.

 

பிறகு அவனே ஆரம்பித்தான்.

 

"ஹனி....!",

 

"ம்....!",

 

"எனக்கு மறுபடியும் ஹனி வேணும் போல இருக்கே....!",அவளது முகத்தைப் பார்த்தபடி கூறியவனின் விரல்கள்...அவளது செவ்விதழ்களை வருடியது.

 

"ம்...இருக்கும்...!இருக்கும்...!முதல்ல நகருங்க....!நான் போய் டின்னர் ரெடி பண்ணனும்...!",முழு பலத்தையும் திரட்டி...தன் மேல் படுத்திருந்தவனைத் தள்ளி விட்டு விட்டு ஓடி விட்டாள்.

 

"மை ஸ்வீட் ஹனி....!",அவனது இதழ்கள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டன.

 

அகம் தொட வருவான்...!!!



கருத்துகள்